Tuesday, November 10, 2020

நமக்கும் நவம்பர் புரட்சி தேவை - மக்கள் அதிகாரமே உண்மையான மக்களாட்சி..

நவம்பர் 7  என்பது வெறும் தேதியல்ல. உழைக்கும் மக்களின் கோபங்கள் வெற்றிபெற்ற நாள். வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள். அதிகாரத்தின் சவுக்குகளின் பிடி உழைக்கும் மக்களுக்கு கைமாறிய நாள். ஆதிகார ஆண்டைகளை ஓட விட்டு அடித்த நாள்.  கையேந்திக் கேட்ட உழைக்கும் மக்கள், அதிகாரத்தை கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். 

உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை, மக்கள் தான் அரசு என நிரூபித்த நாள். விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். 

மண்வெட்டி புடிச்ச கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை புடிச்ச கைகள் அரசை வழிநடத்திய நாள்.  எல்லாம் மக்களும் சமம், மக்களுக்காக தான் அரசு என்று நிரூபித்த நாள்.

1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றில் கடந்து போகக்கூடிய நிகழ்வு அல்ல. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து நிறுவாகங்களையும் மக்களே நிறுவகிக்க முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு.

ஒரு சாதாரண உழைக்கும் கூலி மக்கள் கூட நாட்டை ஆள முடியும், அனைத்தையும் உருவாக்குபவன் தொழிலாளி, அவன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நாள். 

அப்பிடி உழைக்கும் மக்கள் என்ன பண்ணிட்டாங்க னு கேக்குறீங்களா..?

முதல் உலகப் போர் நடந்த காலகட்டம். நிக்கோலஸ்னு ஜார் மன்னன் ஆட்சி நடக்குது. அந்த பயபுள்ள எல்லா நாடுகள ஆக்கிரமிப்பு பண்ணவும், அதுக்கு எதிரா சண்டைக்கு வந்த நாடுகளுக்கு பதிலடி கொடுத்து சமாளிக்கதுமா இருந்தான். இப்படியே போர் செஞ்சதால லட்சக்கணக்கான ரஷ்யப் படை வீரர்கள் செத்துபோயிட்டே இருக்காங்க.

செத்தவங்க குடும்பத்துல அவுங்க மனைவிமார்களும், குழந்தைகளும் எந்த ஒரு வேலையும் இல்லாம, வருமானமும் இல்லாம கஞ்சி தண்ணி இல்லாம செத்துட்டு இருக்காங்க. ரெம்ப கொடுமையான காலகட்டம். பெண்கள் வாழ வழியில்லாம, குழந்தைகள வழக்க முடியாம விலைமாதரா ராணுவ வீரர்களுக்கு போயி, அதுல வந்த காசுல வாழவேண்டிய நிலமை. 

அப்போ விலைவாசியோ 300 சதவிகிதம், 400 சதவிகிதம் னு ஏறி போச்சி, ஒரு பிரட் பாக்கெட் 1 ரூபாய் இருந்ததுனா அத 250 ரூபாயக்கு வாங்கி சாபுடுற கொடுமை. அந்த விலையிலயும் கூட உணவுப் பொருட்கள் கிடைக்காத பற்றாக்குறை.

தொழிற்சாலைகளில கொடுமையான வேலை. 18 மணி நேரம் உழைச்சாதான் 2 வேலையாவது துன்ன முடியும். இதுல ராணுவ அடக்குமுறை வேற, கிராமத்துல பண்ணை அடிமை முறை வேற னு மக்கள் ரெம்ப கொடுமைப்பட்ட காலம்.

இப்படி ஒரு நிலைமையிலதான் மக்கள் வாழ்க்கைய வெறுத்து எதிர்கால புள்ளைகளுக்காக போராட வாராங்க. இன்னும் இந்த அதிகாரத்தனம் பண்ற முதலாளித்துவ ஆட்சில மக்கள் இருந்தா சோத்துக்கு வழியில்லாம தான் சாவான், இந்த ஆட்சி முறைய ஒழிக்காம மக்களுக்கு விடிவுக்காலம் கெடையாது னு போராடா வாறாங்க.

அப்போதான் 1917 மார்ச் 8. உலக மகளிர் தினம் னு பெண் தொழிலாளர்களும் பொங்கி எழுந்து போராடுறாங்க. அவுங்களோட  ஆண் தொழிலாளர்களும் இணைஞ்சி போராடுறாங்க.  இவங்க போராட்டத்த பாத்து ராணுவத்தில வேலைசெஞ்ச படைவீரர்கள் அதிகம் பேர் வந்து மக்கள் போராட்டத்துக்கு துணையா இருக்காங்க.  

அப்போதான் "பெட்ரொகிராட் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் சோவியத் அமைப்பு" னு ஒரு குழு உருவாகுது. எல்லா எடதுலயும் போராட்டம் நடக்கு. இந்தியாவ விட ஆறு மடங்கு பெருசு ரஷியா. ஆறு இந்திய நாட்ட வைக்கலாம். அங்க எல்லா பகுதிக்கும் போராட்டம் பரவுது. 

விளைவு? ஒரே வாரத்தில மன்னராட்சி முறைய தூக்கி எறிஞ்சி. ஒரு அரசு உருவாகுது ஆனால் அதுவும் முதலாளித்துவக் கட்சிகளைக் கொண்ட அரசுதான். 

மன்னராட்சி காலகத்துல கம்யூனிச புரட்சிய பேசி, கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, வெளிநாட்டுல இருந்து மக்களுக்காக செயல்பட்ட லெனின், மன்னராட்சி முடிஞ்சதும் மறுபடியும் ரஷியா வராப்பல. 

ரஷியா வந்து பாத்தா.. மன்னராட்சி முடிவுக்கு வந்து அது மக்கள் ஆளுர அரசா இல்லாம முதலாளித்துவ அரசாங்கமாதான் இருந்துச்சி. 

இந்த அரசும் போர் நடத்தி, நாடு புடுச்சி முதலாளித்துவத்தை வளர்க்குறதாவே இருந்துச்சி.

இந்த அரசாங்கமும் கேவலகட்ட தனமாவே இருக்கு, இத கலைக்கணுமுன்னு "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!’’ அதாவது மக்களுக்கே னு லெனின் தலைமையில கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் பண்ணிட்டே இருந்தது.

ஆனா அரசாங்கமோ மக்களுக்கு எதிரா செயல்பட்டுட்டு இருந்துச்சி. அரச எதிர்க்குற மக்கள் மீது கொடிய அடக்குமுறையை ஏவுனது. போராட்டம் பண்ணுனா நம்ம தூத்துக்குடி மக்களை சுட்டு கொல்ற மாதிரி வேலைய பண்ணுச்சி. 

மக்களுக்கு ஒரு புரிதல் வந்தது. நாட்டை மக்கள் தான் நிருவாகம் பண்ணனும், மக்களை தவிர வேற யார் அரசியல் அதிகாரத்துக்கு வந்தாலும் மக்களுக்கு அழிவுதான் னு புரிஞ்ச மக்கள் "பெட்ரோகிராட் சோவியத்" னு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ செயல்பட தொடங்குறாங்க.

நவம்பர் 7 விடியகாலை 1:25 மணிக்கு ’செங்காவலர்கள் (Red Guards)‘ ங்கிற ஆயுதம் ஏந்திய தொழிலாளர்களும், படைவீரர்களும் பெட்ரொகிராட் நகரைச் சுத்தி வளச்சி, அடுத்தடுத்து அரசின் முக்கிய நிறுவனங்கள கைப்பற்றுறாங்க. மக்கள் நைட்டோட நைட்டா அடிச்ச அடியில, அடுத்த நாளு நவம்பர் 8 ரஷ்யா சோவியத் பிரதிநிதிகளின் மாநாட்டில் லெனினுடைய தீர்மானம் வெற்றி பெறுது. அரசு அதிகாரங்கள் எல்லாம் மக்கள் கையில கிடைக்குது.

அன்னைக்கு சாந்தரமே மாநாடு மறுபடியும் கூடுது, புதிய அரசின் முதல் உத்தரவா “போர் வேண்டாம், நியாயமான சமாதானத்துக்குத் தயார்னும், இரண்டாவது உத்தரவாக, உழுபவருக்கே நிலத்தைச் சொந்தம் னு நிலங்கள் அனைத்தும் மக்களுக்கே பிரிக்கப்படுது.  

புதிய சோவியத் அரசாங்கம், பிரதமர் தோழர் லெனின் தலைமையிலான அமைச்சரவை, தேர்ந்தெடுக்கப்படுது, தலைநகர் பெட்ரொகிராடில் வெற்றி அடைந்த புரட்சி, விரைவிலேயே ரஷ்ய நாடு முழுவதும் பரவி வெற்றி பெறுது.

அப்பிடி இவுங்க போராட்டம் வெற்றி அடைஞ்சி என்ன பண்ணிட்டாங்க னு பாத்தா...?

1.மத்த நாட்ட அடிமைப்படுத்துற காலனி ஆதிக்க முறைக்கு முடிவு கட்டிச்சி. 

2.அனைவருக்கும் கல்வி, வறுமை ஒழிப்பு, உணவுக்கான உத்தரவாதம், சுகாதாரம், முழு வேலைவாய்ப்பு னு வேலை இல்லாத் திண்டாட்டத்தை இல்லாமல் ஒழிச்சது.

3.பெண்களுக்கு சம உரிமை அறிவிச்சது.

4.சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில சமூகப் பாதுகாப்பை உறுதி செஞ்சது.

5.நீண்ட கால போராட்டமான வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது. 

6.சுரங்கம் போன்ற கடினப் பணிகள் மற்றும்  மருத்துவப் பணிகள் செய்வோருக்கு வேலை நேரம் 6 மணி நேரமா ஆக்கப்பட்டது.

7.வருடத்தில் ஒரு மாத காலம் முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டது.

8.ஆண்கள் 60 வயதிலும், பெண்கள் 55 வயதிலும் ஓய்வு பெற்றவுடன் ஓய்வு ஓயவூதியம் வழங்கப்பட்டது.

9.பெண் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவம் நிலைநிறுத்தப்பட்டது. 

10.அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கப்பட்டது.

11.சீனப் புரட்சியின் வெற்றி, வியட்நாம் மக்களின் போராட்டம், கொரிய மக்களின் போராட்டம், கியூபா புரட்சியின் வெற்றி போன்ற அனைத்து நாடு விடுதலையிலும் ரசிய மக்களின் பங்கு இருந்தது.

12.உலகில் பசியற்ற முதல்நாட்டையும், எழுத்தறிவற்றவர்களே இல்லாத முதல் நாட்டையும் உருவாக்கியது.

இப்படி ஒரு மக்கள் புரட்சி வெற்றி பெற்ற நாள்தான் நவம்பர் 7 எனும் புரட்சி நாள்.

இப்பிடி புரட்சி செஞ்சி தான் மக்கள் அதிகாரத்த அடையமுடியமே ஒழிய நமக்கான அதிகராத்த யாரும் கொடுத்திரமாட்டாங்க.

நம்ம இந்திய நாட்டோட நிலைய பாத்தாலே புரியும். இங்க மக்களாட்சி, ஜனநாயகம் னு பேசிட்டு இங்க நடத்தப்படுற ஆட்சி எல்லாம் பணக்காரனுக்கும், பூணுல் காரன் சுகத்துக்கும் மட்டும் தான் நடக்கும். மக்கள் இங்க எந்த போராட்டம் பண்ணுனாலும் அத அரசே தடுக்கும். டெர்லைட் ஆலையால குழந்தைகளுல இருந்து பெரியவங்க வரைக்கு நோய்கள் வருது, புற்றுநோயாளிகளோட எண்ணிக்கை இதனால அதிகமாகுது. இது நம்ம அடுத்த சந்ததியினர பாதிக்கும் னு மக்கள் அரசுக்கு தெரிய படுத்த போராட்டுனா.. இங்க மக்களை அரசே சுட்டு கொல்லும். இதுதான் இந்தியாவோடா மக்களாட்சி லட்சணம். 

இது மக்களுக்கான அரசு இல்ல, எந்த அதிகாரமும் மக்கள் கையில இல்ல, கேள்வி கேட்குற உரிமை கூட இங்க பரிக்கப்படுது. மீறி கேள்வி கேட்டு போராட்டம் பண்ணுனாலும் மக்களை வேற மாதிரி திசை திருப்புது மீடியா.

இங்க எல்லாம் தனியார் கையில்தான் இருக்கு, அரசும் அத பாதுகாக்க மட்டும்தான் வேலை செய்யுது.

நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியுமா? னு கலங்கி நிற்குற அளவுக்கு தனியார்மயம், புதிய கல்விக் கொள்கை, நீட் னு நம்ம மக்கள்ட்ட கல்விய பரிக்குறாங்க,

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி, எட்டுவழிச் சாலை, 
பாரத்மாலா, 
சாகர்மாலா னு திட்டத்த போட்டு அரசே விவசாயத்த ஒழிக்குது. 

ஜி.எஸ்.டி, வரிவிதிப்பு, 
அன்னிய நிறுவனங்களுக்கு ஒத்து ஊதுற  வணிகக் கொள்கைக னு சின்ன சின்ன வியாபாரத்த அரசே கெடுக்குது. 

இதையெல்லாம் நாம தெரிஞ்சு அரசுக்கு எதிரா போராடுனா.., ஜாதி, மத வெறிகளை தூண்டி விடுது. போராடினால் கைது, சிறை மட்டுமில்ல, சுட்டும் கொல்லுது.

டாஸ்மாக், மொழி திணிப்பு, முஸ்லீம் வெறுப்பு, பாரத மாதா, தேசபக்தி னு மக்களை  கேள்வி எழுப்ப விடாம தினமும் புதுசு புதுசா பிரச்சினைய அரசே திட்டம் போட்டு செய்து.

நாம விளைவித்த பொருட்களுக்கு போதுமான விலையை நிர்ணயிக்காம இருப்பது அரசு தான்.

விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க கூடாது னு ஆறு, ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்காம பாழாக்குவதும் அரசு தான்.

படிச்சவங்களுக்கு வேலையில்ல, டீசல் விலை உயர்வு, ஆற்று மணல் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை, கிரானைட் கொள்ளை, உலோகங்கள், பாக்சைட் போன்ற தாது வளங்கள் கொள்ளை னு மக்கள் அனைவருக்கும் சொந்தமான எல்லா இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளும், கட்சி ரவுடிகளும் கொள்ளயடிச்சி சொத்து சேர்க்க அனுமதி கொடுக்குறதும் அரசு தான்.

மக்களுக்கு எதிரா அரசே செயல்படும் போது இது எப்படி மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி னு சொல்லமுடியும்.

நமக்கெல்லாம் நிம்மதியா, மகிழ்ச்சியா, கவலையே இல்லாத நாள் வராதா? னு  தான் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக னு ஓட்ட போடுறோம். அவனுகளும் மக்களோட பிரச்சினைகள தீர்த்து வைக்கிறோம் னு வாக்குறுதி கொடுத்துதான்  ஓட்ட வாங்குகிறாங்க.  65 வருசமா எந்தக் கட்சியாலும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடிஞ்சதா..? 

இதுதான் இந்த நாட்டோட மக்களாட்சி லட்சணம்.

மக்கள் பிரச்சினைகளை மக்கள் ஒன்னு சேர்ந்து போராடுனா மட்டுத்தான் தீர்க்கமுடியுமே தவிர வேற யாரும் இங்க பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

மக்கள் கையில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கமுடியும். அதனால மக்கள் எல்லோரும் அதிகாரத்த பரிக்கவே போராடனும். நவம்பர் 7 புரட்சி மாதிரி இங்கயும் மக்கள் புரட்சி வெடிக்கனும்.