Wednesday, May 26, 2021

டக்ளஸ் முத்துக்குமாரின் 300 பாட்டன்ஸ்களில் ஒரு சில பார்ட்டன்ஸின் மறைக்கப்பட்ட வரலாறு.. ✍ 🙇

நல்ல அறிவு, ஒழுக்கம், பக்தி, வீரம், போர்க்கலை, இயல், இசை, நாடகம் னு 64 கலைகளில 63 கலைல சிறந்து விளங்கினார் எங்க பாட்டன். அது வேற யாருமில்ல கிமு.4ஆம் நூற்றாண்டுல ஏசப்பா பொறக்கத்துக்கு முன்னாடியே பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு, கொங்கு, பிங்கு, வோட்கா னு ஒட்டுமொத்த தமிழ்நாட்டயே ஆண்ட முதல் மாமன்னரான "மன்னன் இரண்டாம் டக்ளஸ்" தான்.

63 கலைகளில பாஸ் பண்ணின பாட்டன் பேலன்ஸ் ஒரு கலையையும் எப்படியாவது கத்துக்கணுமுனு ரெம்ப ஆர்வமா இருந்தாரு. யாருட்ட கத்துக்கலாம் னு எகிப்திய பாரோ மன்னன் அன்பளிப்பா கொடுத்த வெஸ்டன் டாய்லெட்ல உக்காந்து போற பழக்கமில்லாம, மேலயே ஏறி உக்காந்து கக்கா போயிட்டே யோசிச போது கனப்பொழுதில் மைண்ட்க்கு வந்தவர் தான் பாட்டனோட பால்ய நண்பன் Mr.பொய்யில் புலவன். 

"சரி நம்ம நண்பன்ட்யே கத்துக்கிலாம்"னு நண்பன பாக்க பாட்டன் போனாரு. அப்பதான் பாட்டனோட நண்பர் ரெம்ப பிஸியா "செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம்..."னு எழுதிட்டு இருக்கும்போதே எங்க பாட்டன் எழுது கோல புடுங்கி தூரபோட்டு "செல்வம் நல்லாத்தான் இருக்கான், நீ எப்படி இருக்க நண்பா..?"னு கேக்க, வள்ளுவருக்கு ஒரே சர்ப்பிரேஸ்... "வா நண்பா எப்படி இருக்க..? என்ன சோலியா இந்த பக்கம்..?"னு கேக்க, எங்க பாட்டன் தலைய சொறிஞ்சிக்கிட்டே "அது ஒன்னுமில்ல.. 64 கலைல 63 தெரியும், பேலன்ஸ் ஒன்ன உன்கிட்ட கத்துக்கிடனும் வந்தேன்"னு சொல்ல, "நீ தலைய சொரியும் போதே தெரியுது நீ எந்த சப்ஜெக்ட்ல வீக் னு, நான் உனக்கு எழுதி தாறேன்"னு ஒரு நைட் புல்லா உக்காந்த வள்ளுவர், எங்க பாட்டனுக்காக எழுதுனது தான் காமத்துபால். வள்ளுவர் சட்டைப் பையில இருந்து எழுதுகோல எடுக்குற அளவுக்கும், புடுங்கி தூர போடுற அந்தளவுக்கும் வள்ளுவரோட எங்க பாட்டனுக்கு பழக்கம் இருந்துச்சி. அப்பிடியே சில்லற கிடந்தாலும் நோண்டி எடுத்துருவாப்ல.

இவர் இப்படினா கிபி.7ம் நூற்றாண்டுல வாழ்ந்த எங்க பாட்டன் "மன்னர் 7ஆம் டக்ளஸ்".. தமிழ்நாட்ட ஒருத்தரே ஆள ரெம்ப சிரமம் இருந்ததால நாட்ட மூணா பிரிச்சி.. சேர, சோழ, பாண்டியனுக்கு  குத்தகைக்கு விட்டு சம்பாரிச்சிட்டு இருந்தாப்பல. நாட்ட குத்தகைக்கு விட்டாலும் நாட்டோட ராணுவம் எங்க பாட்டன் கண்ட்ரோல்லதான் இருந்துச்சி.

சீமான் பாட்டனக்காவது 6000 யானை..., ஆனா என்னோட பாட்டனுக்கு 60ஆயிரம் கோடி யானைகள். எங்க பாட்டன் யானையை கப்பல்ல ஏத்தி கொண்டுபோயி போர் செய்யனமுன்னு அவசியம் இல்ல. "நாங்களும் போருக்கு வாறோம்டா.."னு சொன்னாலே போதும்... அத்தன எதிரி நாட்டு பயகளும் முண்டியடிச்சி வந்து கப்பம் காட்டுவானுக. யானை படை மாதிரி டைனோசர் படையும் வச்சிருந்தார்.

ஆனா எங்க பாட்டன் அவனுக கப்பம் கட்டுற பணத்த எப்பவுமே கைநீட்டி வாங்குனது கிடையாது. இருந்தாலும் காசு குண்டா குண்டாவா சேரும். அவ்வளவு காசுயும், தங்கம், வைரம் எல்லாத்தையும் அவங்களுக்கே திருப்பி கொடுத்துட்டு.., கடைசியா என்னோட பாட்டன் அவங்கள பாத்து சொல்லுற வார்த்த.. "இந்த மாதிரி காசெல்லாம் என்கிட்ட டன் கணக்குல 200 கப்பல்ல இருக்கு.. அதனால இந்த காச நீங்களே எடுத்துட்டு போயி புள்ளிக்கு நாலு பப்பரமுட்டாயி வாங்கி சாப்புடுங்கடா".. னு திருப்பி அனுப்பிச்சிருவாரு.

கப்பல் னு சொன்னதும் தான் நியாபகத்துக்கு வருது, 9ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த எங்க பாட்டன் "மன்னர் 8ஆம் டக்ளஸ்" ஆட்சி செஞ்சிட்டு இருந்த காலம் அது. சோழ நாட்டில இருந்து எங்க பாட்டனுக்கு ஒரு ஓலை வந்துச்சி. எங்க பாட்டன் விரிச்சி படிச்சா "தாயுள்ளம் கொண்ட 8ஆம் டக்ளஸ் மன்னா.. சோழ நாட்டு நெய்தல் படைக்கு ஆபத்து, எதிரி நாட்டுப்படை நம்ம நெய்தல் படையை நெய்யபுடைக்க அடித்து அனுப்புகிறார்கள். ஆபத்தில் இருக்கும் நம் படைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவவும். நெய்தல் படை தளபதியை அனுப்பிவைக்கிறேன்."னு இருந்துச்சி.

ஓலைல இருந்த மாதிரி 3 நாள் கழிச்சு நெய்தல் படை தளபதி கோமாண்டி னு ஒருத்தன் வந்துருக்கான். எங்க பாட்டன் முதல் நாள் அவனுக்கு ஆமக்கறி, நண்டு, நத்த, திமிங்கலக்கறி னு போட்டு விருந்து வச்சிருக்காப்ல. கோமாண்டி சாப்பிட்டுட்டே இருக்கும் போது எங்க பாட்டனோட படைவீரன் என்ன சாப்புடுறான் னு எழுதி வச்சிட்டே இருந்தான். மறுநாள் எங்க பாட்டி நெய்தல் தளபதி கோமாண்டிக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் வச்சி கொடுத்துருக்கு. தளபதி சாப்புட இட்டிலிய பிக்கும்போது ஒரு சிக்கன் லாலிபப் பீஸ்சு உள்ள இருந்துருக்கு. கோமாண்டி பாத்து மிரண்டுட்டான். "மன்னா.. இட்லிக்குள்ள எப்படி சிக்கன் வந்துச்சி..?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "டே.. சிக்கன் புடிச்சா சாப்புடு, இல்லனா ஓரமா ஒதுக்கி வச்சிட்டு வெறும் இட்டிலிய மட்டும் சாப்புடு "னு சொல்ல, ஆட்சிறியப்பட்டே சாப்ட்டான்.

அடுத்து நைட் டின்னருக்கு கோமாண்டிக்கு சப்பாத்தி சுட்டு கொடுத்துருக்காங்க. சினேகா ஆசிர்வாத் ஆட்டோ மாவுல குல்ஹா சப்பாத்தி செஞ்ச மாதிரி சப்பாத்தி பந்து மாதிரி உப்பி இருக்க.., சாப்புட உக்காந்த கோமாண்டி சப்பாத்தி மேல விரல வச்சி ஓட்டைய போட.. சப்பாத்திக்குள்ள இருந்து ரெண்டு பூனக்குட்டி வெளிய ஓடுது. கோமாண்டி மிரண்டுட்டான். "மன்னா... காலைல இட்லிக்குள்ள சிக்கன் லாலிப்பப் இருந்துச்சி, இப்போ என்னடானா சப்பாத்திக்குள்ள இருந்து ரெண்டு பூன ஓடுது..?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "டே.. அது எங்க உணவு வழக்கம், இத உங்க நாட்டுக்கு போனதும் எல்லோரட்டையும் சொல்லு"னு சொல்ல, வழக்கம் போல எங்க பாட்டனோட படைவீரன் என்ன சாப்புடுறான் னு நோட்ஸ் எடுத்துட்டு இருந்தான்.

"மன்னா.. இவர் எதுக்கு நான் சாப்புடுறத நோட்ஸ் எடுக்காரு..? நான் என்ன என்ன விரும்பி சாப்புடுறேன் னு தெரிஞ்சிக்கவா.. ?"னு கேக்க, "நீ புழுக்கைய கொடுத்தாலும் தின்ப.. நீ என்ன சாப்புடுற னு தெரிஞ்சிகிட்டு நான் என்னடா பண்ணப்போறேன். அது நீ சாப்பிட்ட சாப்பிட்டுக்கான பில்லு.. போகும் போது அக்கவுண்ட் செட்டில் பன்னிரு.. ஓசில சாப்புட இது ஒன்னும் சத்திரம் இல்லடா.."னு பாட்டன் சொல்லிஇருக்காரு.

அடுத்து சோழ நாட்டுக்கு வெப்பன் வாங்கி கொடுக்க எங்க பாட்டன் கோமாண்டிய கூட்டிட்டு வெப்பன் குடோன்க்கு போனதும் எங்க பாட்டன பாத்த வேலையாளு "வாங்க மன்னா.. நேத்து தான் புது ஐட்டம் நாளு பீஸ்சு இறங்கி இருக்கு.. சோழ நாட்டுக்கு என்ன வெப்பன் கொடுக்கலாம் மன்னா..?"னு கேக்க, அது எங்க பாட்டன் "Ak 47 ஒரு 50...., Pk 47 ஒரு 70...  "70 போதுமூலடா..?" னு கோமாண்டிகிட்ட கேக்க ",போதும் மன்னா.. Pk 47 என்ன மன்னா புதுசா இருக்கு.?",னு கேக்க "இது புது ஐட்டம்டா, ஏதன்ஸ்ல இருந்து எறக்குமதி பண்ணிருக்கேன். இந்தா சும்மா சுட்டு பாரு.."னு எங்க பாட்டன் கொடுக்க, கோமாண்டி சுட்டு பாத்துட்டு "மன்னா.. இந்த நாட்டுல pk 47 வெப்பன்ல சுட்ட மொத ஆளு நான்தான..?"னு கேக்க, "ஆமடா.. இந்த விசயத்த உங்க நாட்டுல போயி ஊர் ஊரா சொல்லு"னு பாட்டன் சொல்ல, கோமாண்டி தலை குனிஞ்சிட்டு "சரி மன்னா"னு சொன்னான்.

அடுத்து வெங்காய வெடி நாளு பாக்ஸ், தக்காளி வெடி 5 பாக்ஸ், கிழங்கு வெடி 10 பாக்ஸ் னு வாங்கி கொடுக்க, "என்ன மன்னா.. வெடிகுண்டு பேரெல்லாம் குழம்பு வைக்குற ஐட்டமா இருக்கு..?"னு கேக்க, "அது தமிழ் பேருடா.. எல்லாத்தையும் தமிழ்ல மாத்திட்டேன். நாம் தமிழண்டா ங்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கணும்டா.. பிளம்ஸ் பழம் னு ஒரு வெடி இருக்கு உங்க நெய்தல் படைக்கு வாங்கிட்டு போறியா..?"னு 10 பாக்ஸ் பிளம்ஸ் வெடிய வாங்கி கொடுத்து வழியனுப்பி வச்சாரு.

அடுத்து கொஞ்ச நாள்ல எங்க பாட்டனுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துச்சி. அவர் பேர் தான் "மன்னர் 9ஆம் டக்ளஸ்". பொறக்கும் போதே நர்ஸ் விரல கடிச்சிபுட்டாப்ல. அவரோட மண்டியிடாத மானம் மறவர் குலத்துக்கே எடுத்துக்காட்டா இருந்துச்சி. எதுக்கும் மண்டி போடமாட்டாப்ல. படிக்கும் போது கூட தப்பா ஆன்ஸர் பண்ணி டீச்சர் மண்டிபோட சொன்னாக்கூடா, தண்டனையை மாத்தி கவட்டைக்குள்ள கையவுட்டு தவளை மாதிரி ஜம் பண்ணியே போறேன் டீச்சர்.. மண்டி மட்டும் போடமுடியாது டீச்சர் னு சொல்லுவாப்பல.

ஒரு சமயம் எங்க பாட்டன் மன்னர் 9ஆம் டக்ளஸ் 4ஆம் ராஜராஜ சோழன்கிட்ட குத்தகை பணம் வாங்க போகும் போது சோழ நாட்டில கடற்போர் நடந்துட்டு இருந்தது. நெய்தல் படை ரெம்ப அடிவாங்கிட்டு இருந்துச்சி. நாங்க Pk 47 வெப்பன் குடுத்தும்கூட எவனுக்கும் குறி பாத்து சுட தெரியல. எங்க பாட்டன் போனதும் எல்லாருக்கும் சுடுற பயிற்சி கொடுத்தாரு. கடற்போர்ல எதிரி நாட்டுகாரங்க நெய்தல் படை கப்பல எல்லாம் அடிச்சி புடிக்கிட்டு போயிட்டாங்க. எங்க பாட்டன் கப்பல்க்கு இப்ப என்ன பண்றது யோசிச்சாரு. தளபதி கோமாண்டிய கூப்பிட்டு "நீங்க எல்லாம் தூண்டி போட்டு ஆளுக்கு ஒரு ஆமைய புடிங்க.."னு கட்டளை போட, அதுக்கு கோமாண்டி "மன்னா.. ஆமக்கறி விருந்தா..? செமயா இருக்கும், படைவீரர்கள் எல்லாம் ஆம புடிக்கட்டும், நான் மசாலா ரெடி பன்றேன்.."னு சொல்ல,

கோவமான எங்க பாட்டன் கோமாண்டிக்கு போடனில ரெண்ட போட்டு "எவன்டா இந்த தின்னிக்கூ...ய நெய்தல் படைல சேத்தது.. போர் நடந்துட்டு இருக்கு தின்கிறத பத்தி பேசுறான்.."னு கத்த ஒரு வழியா Mr.ராஜராஜன் சமாதானப்படுத்திட்டாப்ல. அப்றம் ஆமைய புடிச்சி கறிய தனியா எடுத்து போட்டுட்டு ஆமா ஓட்ட கவுத்தி போட்டு போட் மாதிரி கடல்ல மிதக்க விட்டு ஏறி உக்காந்துட்டு எப்படி போர் செய்யனுமுன்னு கத்து கொடுத்தாரு. எங்க பாட்டன் ஒரு குண்டா சட்டி கெடைச்சாலே கவுத்தி போட்டு கடற்போர் செய்வாரு, ஆம ஓடுனா சும்மாவா விடுவாரு. ஆம ஓட்டுல போயி எதிரி படைகல ஓட ஓட அடிச்சி விரட்டுனாரு. 

ஒரு சமயம் எங்க பாட்டன் நெய்தல் படைக்கு போர் பயிற்சி கொடுக்கும் போது 40000 டன் அரிசி கப்பல் பாடர்ல ரெம்ப நேரமா நிக்க, தளபதி கோமாண்டி "மன்னா.. இது ஆஸ்திரேலியா அரிசி கப்பல்.. நாங்க வேணா கப்பல சுட்டு பயிற்சி எடுக்கட்டுமா.?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "நான் எவன் கோவனத்துல கை வச்சாலும் வப்பனே தவிற அடுத்தவன் தீவனத்தில கை வைக்கமாட்டேன்"னு சொல்லிட்டாப்ல. ராஜராஜன் இந்த செயல பாராட்டி பரிசா எங்க பாட்டன் நாடு திரும்பும் போது 48 கிலோ ஆமக்கறிய கொடுத்து அனுப்புனாங்க.

ராஜராஜன் சோழன் வரலாறு பேசுற யாரும் எங்க பாட்டன் வரலாற மறந்தும் கூட பேசமாடிக்குறாங்க. வரலாறு நெடுகிலும் இது திட்டமிட்டே மறைக்கடிக்கப்படுகிறது. இதுக்கு காரணம் திராவிடம் னு போலி கதைகளை சொல்லி திராவிட மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் தான். 

எங்க பாட்டன் வரலாறு இல்லாம தமிழ்நாட்டில எந்த நிகழ்வும் நடக்கல. எங்க பரம்பரையின் முதல் பாட்டனே தமிழர்களின் முப்பாட்டனான முருகனோட வீட்டுக்கு மூணு வீடு தள்ளி வாழ்ந்த மாவீரன் முதலாம் டக்லஸ். முருகனுக்கு வேட்டையாட கத்துக்கொடுத்துவரு. வேல்கம்பையும் மயிலயும் வாடகைக்கு விட்டு வாழ்ந்து வந்தார். உங்க முப்பாட்டன் முருகனே எங்க பாட்டன்கிட்ட வேலும், மயிலும் வாடகைக்கு வாங்கிட்டு போயித்தான் வேட்டையாடி கஞ்சி குடிச்சான். 

வள்ளுவர் வரலாறு தெரியாம போனதால எங்க பாட்டன் "மன்னர் 2ஆம் டக்ளஸ்" வரலாறும் தெரியாம போச்சி. ஆங்கிலேயரை எதிர்த்து முதல் முதலில் விடுதலை போருக்கு வித்திட்ட எங்க பாட்டன் "மாமன்னர் 44ஆம் டக்ளஸ்" மன்னர எத்தனை பேருக்கு தெரியும்..?  ஆங்கிலேயரை என்னோட பாட்டன் முப்பதாயிரம் டைனோசர் படைகள வச்சி ஓட ஓட விரட்டுன வரலாறு எங்கே..?

விடுதலை போரில் கலந்தகொண்டதாக சொல்லப்படுகிற தீரன் சின்னிமலைக்கு போர் செய்ய 50 டைனோசர்களை யார் கொடுத்தது..? விடுதலைப் போரில் கண்டிப்பா கலந்துக்குவேன் என்று புழுதியில் புரண்டு அழுத புலித்தேவனுக்கு அறிவுரை கூறியது யார்..? கிளர்ச்சியின் விளைவால் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்களுக்கு மாத்து துணி கொடுத்து உதவியது யார்..? அழகுமுத்து கோன் குழந்தையா இருக்கும்போது கோன் ஐஸ் வாங்கி கொடுத்து கொஞ்சியது யார்..? பண்டார வன்னியனின் பங்காளி சண்டையை தீர்த்து வைத்தது யார்..? வெள்ளயன் கண்ணில் படமாலிருக்க கட்டபொம்மன் தலைமறைவாவதிற்கு  ஓடியதில் கவட்டை அரித்து கயத்தாரில் ஒதிங்கியவனுக்கு கஜா தைலம் அனுப்பியது யார்..? ஓடுவதுக்கு எதுவா ரன்னிங் சூ வாங்கி கொடுத்தது யார்..? அடிமை வேலை என்றால் இப்பிடித்தான் விசுவாசமாக செய்யவேண்டும் என்று எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒண்டிவீரன், மொண்டிவீரன், நோண்டிவீரன்க்கெல்லாம் ஆயுதம் குடுத்து உதவியது யார்..?

என் பாட்டன் வரலாறு தெரியக்கூடாது என்று தெளிவாய் செயல்படுகிறன திராவிட அரசியல் கட்சிகள். இன்னும் எத்தனை காலம் இந்த அவலம்..? கூடிய விரைவிலேயே "நாங்க தமிழ்காரங்க" கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது ஒவ்வொரு ஊரிலயும் எங்க பாட்டன்க்கு மரியாதை செய்யும் விதமாக மணிமண்டபம் அமைப்போம் என்று இங்க பதிவு செய்ய நான் கடமைப்பட்டுருக்கிறேன்.

அவர்கள் ஆட்சியிலும் அமைக்காவிட்டால் எனக்கும் வரலாறு தெரியும், ஆமை தெரியும், ஆமக்கறி தெரியும், இடலி கதை தெரியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதை தெரியும், அதை மக்கள் மத்தியில் பேசி நானும் "நாம் பச்சை தமிழர், ஊதா தமிழர், வெள்ளை தமிழர், மாநிற தமிழர் என்றோ அல்லது எங்கள் டார்ச் லைட் தலைவனின் ஆசியுடன் நாம் பிராமணர் என்றோ புதிதாக கட்சிஆரம்பிப்பேன் என்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

எவ்வளவு காலம்.. எவ்வளவு காலம் ஏமாறுவது..? இப்படித்தான் ஒரவுகளே.. நம் தமிழ் சமுதாயம் தன் உணர்விழந்து, மானம் இழந்து, மயிரிழந்து., என்னோட பாட்டன் வரலாறு தெரியாம தற்குரிபிள்ளைகளாய் திரிய போகிறார்கள்.. எவ்வளவு பெரிய அவமானம்...?

No comments:

Post a Comment