Wednesday, May 26, 2021

துப்புரவு தொழிலாளர்கள் இல்லை தூய்மை பணியாளர்கள்- தமிழக அரசின் விளம்பர அரசியல் - சுயநலமாய் மக்கள்...

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, நாடெங்கிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது நல்லா தெரியும். இவர்கள் இன்றைய நிஜ ஹீரோக்கள் என்று பிரதமர் முதல் அனைத்து ஊடகங்களும், மக்களும் கை தட்டி மரியாதை செலுத்துறாங்க. நீங்க மரியாதை செஞ்சி கும்புட்டதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இவுங்க ஏன் இந்த ஆபத்தான சூழல்ல நமக்காக உயிரை கொடுத்து வேலை பாக்கணும்?

போன மாசம் வரைக்கு 9000 மாத வேணும், இப்போ கொடுக்குற சம்பளத்தை முழுசா குடுங்க னு  தமிழ்நாட்டில இருக்குற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி னு எல்லாம் தொழிலார்களும் வீதில நின்னு போராட்டம் பண்ணுணவுங்கதான் நாம இப்போ கும்புடரவுங்க. போன வருஷம் அரசு அறிவிச்ச குறைந்த ஊதிய சட்டத்திலேயே 12,000 சம்பளம் கீழ எந்த வேலையும் நிர்ணைக்கப்படல. ஆரம்ப சம்பளமே 12000 தான்னு அரசே அறிவிச்சிருக்கு. அதே அரசு தான் இவுங்கள 9000க்கு கையேந்தவும் வச்சிருக்கு. கிராம புறங்களில ரெம்ப மோசமா இருக்கு. 15 வருசமா வேலை செஞ்சும் மாத சம்பளம் 3000 கூட கொடுக்கப்படுறதில்ல. பிப்ரவரி வரைக்கும் கூட இவர்களோட கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல..

இப்போ கொரோனா வரவும் நாம இவங்கள பொதுவா பாக்குறோம், சீசனுக்கு மரியாதை செலுத்துறோம். கொரோனா னு வரலனா இவங்க நிலைய நினைச்சி பாத்திருப்போமா..? எப்போவும் இவுங்க நமக்கு சேரி பயக, பறப்பய, சக்கிலிப்பய தான். மூக்க பொத்திட்டு கடந்து போயிட்டேருப்போம். இவுங்க போராட்டத்துக்கு பொதுவான ஆதரவு எதும் கிடையாது. தலித் அமைப்புகள் தான் போராடனும், எங்கயாவது கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் போராடுவான் அதும் உறுப்பினரா இருக்கணும். அந்த சாதிக்கு அந்ததந்த சாதி அமைப்புகள்தான் போராடனும் ங்கிற மனநிலை இங்க பொதுவா இருக்கு. ஆனா, அவுங்க எல்லோருக்காகவும் தான் தெருவுல இருக்குற குப்பையை பெருக்கி, சாக்கடை அள்ளுறாங்க, பீய் மூத்திரத்த கீளின் பண்றாங்கனு படிச்ச மக்களுக்கு புரியுறது ரெம்ப கஷ்டம்தான். 

மாசத்துக்கு 2 பேராவது குழியில இறங்கி கிளீன் பண்ணும் போதே சோலி முடிச்சிரும். நம்மளும் நியூஸ்ல பாப்போம், கடந்து போயிருவோம். அவனுக்கும் நமக்கு என்ன சம்பந்தம்ங்கிற மனநிலை. இப்போ கொரோனா வந்ததும் நாளு ஹீரோகளுல இவுங்களும் ஒருத்தர்.

இதுவரைக்கும் இவுங்க கோரிக்கைக்கு காது கேக்காத மாதிரி இருந்த எடபாடி, கொரோனா வந்ததும் "இவங்க துப்புரவு தொழிலார்கள் இல்லை, இனி இவர்களை தூய்மை தொழிலார்கள் என்று அழைக்கவும்" னு அறிக்கை விடுறார். 

கொரோனா பரவுனதும் எங்க இவுங்க இத சாக்கா வச்சி,  போராட்டம் கீராட்டம் னு ஆரம்பிச்சு ஊர் சாக்கடை அள்ள வரமாட்டாங்களோ னு நினைச்ச எடபாடி அரசு "3 மாசத்துக்கு சிறப்பு ஊதியம்" னு மக்களை ஏமாத்தி தெருவ கீளின் பண்ண கூப்புடுது. இவுங்களும் ஏமாளி மக்கள் தானே, 9000க்கு தொங்குனவுங்களுக்கு  சிறப்பு ஊதியமுன்னா போக தானே செய்யணும். 

"கொரோனா தொற்றுல இருந்து நம்மை பாதுக்காக்க கைகளை சுத்தமாக சோப்பு அல்லது சானிஸ்டிசர் போட்டு கழுவுங்கள்.. கைகளை கொண்டு மூக்கு, வாய், கண்களை தொடுவதை தவிருங்கள்.. முகத்திற்கு மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்.." னு கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு செய்யற அரசு.., கொரோனா தொற்று பாரவாம இருக்குறதுக்கு தெருவுல இறங்கி சுத்தம் பண்ற பணியாளர்களுக்கு, மாஸ்க் கொடுக்கல, குளோஸ் கொடுக்கல,  கை கழுவற சானிட்டிசர் இல்ல னு 10 நாளா சொல்லிட்டு வராங்க, சோசியல் மீடியாலயும் இந்த செய்தி பரவுது. 

அவுங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பயம் இருக்கத்தானே செய்யும. மாஸ்க் இல்லாம சேலை முந்திய வச்சும் துண்ட வச்சும் பொத்திக்கிட்டு குப்பைய கூட்டுறாங்க. இவுங்களுக்கு மாஸ்க் எல்லா நேரமும் கொடுக்கிறது இல்ல, ஒருநாள் மாஸ்க் குத்துட்டு அடுத்த நாள் மாஸ்க் கேட்டா.. கொடுத்த மாஸ்க் எங்க னு கேக்குறாங்க கார்ப்பரேஷன்ல. ஒரு மாஸ்க்க 3 மணி நேரத்திற்கு மேல யூஸ் பண்ணக்கூடாது னு டாக்டர்ஸ் சொல்றாங்க. இவனுக அடுத்த நாளும் அதையே யூஸ் பண்ண சொல்றாங்க. 

குளோஸ் அதிகமா ஆண்களுக்கே தான் கொடுக்குறாங்க பெண்களுக்கு இல்ல, சானிட்டிசர வச்சி ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கை கழுவுறதையெல்லாம் இவங்க நெனைச்சே பாக்கமுடியாது. 

இவுங்க இப்படினா.. துப்புரவு பணியாளர்களில் நேரடி பணியில் இல்லாமல் காண்ட்ராக்டர் பணியில இருக்குறவுங்க நிலைமை ரெம்ப மோசமா இருக்கு.. சென்னையில துப்புரவு காண்ட்ராக்ட்ல வேலைக்கு போறது பெரும்பாலும் "குறிவிக்காருங்க" தான். "குறவர்"னு சொல்லுவாங்க. அவுங்களுக்கு யூனிபார்ம் குடுக்காங்க இவங்களுக்கு எதுவும் இல்ல, மாஸ்க், குளோஸ் எல்லாம் இவுங்க நினைக்கவே கூடாது, சம்பளமும் மாசம் 3500 தான், குப்பைல கெடக்குற பிளாஸ்டிக், தகரம், பாட்டிககல கடைக்கு போட்டுத்தான் குடும்பம் நடத்துறாங்க. சென்னை வேளச்சேரி, தாம்பரம், OMR பக்கம் போனா இவுங்கள அதிகமா பாக்கலாம். முக்கியமா இவங்களுக்கு ஆதார் கார்டு கெடையாது.

தமிழ்நாட்டில மட்டும் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள்,12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் இருக்காங்க. இதுதவிர, 3000 ஆயிரத்துக்கும் மேல காண்ட்ராக்ட் துப்புரவு பணியாளர்கள் இருக்கிறாங்க. இந்த நேரத்தில அரசு யாரும் விடுமுறை எடுக்கக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கு. 

இந்த மக்கள் துப்புரவு வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு போனா.. அவுங்க குழந்தைகளை விட்டு தள்ளியே இருக்காங்க. படுக்கிறது வெளிய தனியாதான். கொரோனா தொற்று பயத்துல வீட்டுக்குள்ள கூட பொழங்க முடியாத சூழல். அவுங்க ஏரியால இருக்குற கடைக்கு போனா கூட இவுங்கள கொரோனா வந்தவுங்க மாதிரிதான் பாக்குறாங்க. தெருக்குள்ள போனா திட்டுறாங்க. ஒரு துப்புரவு பணியாளர் பொண்ண அடிச்சி சாக்கடைக்குள்ள தள்ளிவிட்ட சம்பவம் கூட நடத்துருக்கு.

இப்படி குடும்பத்தில தனிமைப்பட்டும், சமுதாயத்தில தனிமைப்பட்டும் விடுப்பு இல்லாம வேலை பாக்குற துப்புரவு பணியார்கள் மீது அரசின் அக்கறை என்ன..?

முறையா மாஸ்க் குத்துருக்கா....? கை குளோஸ்?
ஒவ்வொரு பணியாளர்களுக்கும் கை கழுவ சானிட்டிசர் வழங்கிருக்கா...?

எதையும் முறையா வழங்காத எடப்பாடி அரசு "துப்புரவு பணியாளர்களை இனி தூய்மை பணியாளர்கள்" என்று அழைப்போம் னு சொல்றதும், கால கவுலுறதும், அவுங்கள பெருமைப்படுத்தும் விதமா "கை தட்ட" சொல்றதெல்லாம் மக்கள் மத்தில பரப்பப்படுற போலி விளம்பரமே தவிற வேற ஒன்னுமில்ல.. இவர்கள இப்படியே ஏமாற்றி இந்த நிலையிருந்து மீள விடாம வச்சிருக்குது அரசும், இந்த சமுதாயமும்.

உண்மையிலயே துப்புரவு பணியாளர்கள் மீது அரசுக்கு அக்கறை இருத்துச்சினா.. தினமும் அவுங்கள பணிமுடிந்ததும் மருத்துவ பரிசோதனை பண்ண முகாம் அமைச்சிருக்கணும்.

எத்தனை துப்புரவு பணியாளர்களுக்கு இவுங்க தினமும் பரிசோதனை பண்ணிருக்காங்க..? தினமும் 'பீலா'' கணக்கு  சொல்ற பீலா..... "துப்புரவு தொழிலாளர்கள் மொத்தம் இவ்வளவு.. இவ்வளவு பேருக்கு பரிசோதனை பண்ணிருக்கோம்.. அதுல இவ்வளவு ரிசல்ட்"னு எப்பவாவது டிவில சொல்லி கேட்டுருக்காங்களா..?

இந்த மக்கள் மேல அரசுக்கு என்ன அக்கறை இருக்கு..? எவ்வளவு காலம் இந்த மக்களை இந்த அரசு ஏமாற்றும்..?

இதெல்லாம் பாத்துட்டு கேள்வி கேக்காம, அவுங்கள "கை தட்டி பெருமை  படுத்துவோம்" னு இருந்தா நம்மள விட மனிதநேயமில்லாத, சுயநலமுள்ள கேவலமான பிறவிகள் யாரும் இருக்க முடியாது...

No comments:

Post a Comment