Tuesday, July 31, 2018

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தம் என்று எப்போதும் ஒப்பந்தம் போடவில்லை - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் - பகுதி 9

காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.

மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது.

சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது.

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது.

ஐநா தீர்மானம் இரு நாடுகளுக்கும் சாதகமாக இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.

1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இந்தியாவிடமிருந்து தனி சுதந்திரம் கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் செயல்படதுவங்கியது.

- தொடரும்....

No comments:

Post a Comment